Wednesday, September 5, 2007

வெற்றியின் முதல்படி…..

காற்றோடு பேசும் இலைகளுக்கு தெரிவதில்லை
ஒரு நாள் காற்றே தம்மை கிழிக்குமென்று;

மலரோடு உறவாடும் வண்டுகளுக்கு தெரிவதில்லை….
ஒருநாள் மலரே தம்மைக்கொன்றுவிடுமென்று;

நிலவோடு காதலாகும் அல்லிக்கு தெரிவதில்லை
விடிந்தால் நிலவே தள்ளிச் சென்றுவிடுமென்று;

கிழிந்தாலும் அழிந்தாலும் பிரிந்தாலும்
இவைகள் வழக்கத்தை மட்டும் மாற்றுவதில்லை:

தோற்றுவிட்ட போதும் துவழாமல் மீண்டும்
விட்டுவிட்ட வாழ்க்கையை தொட்டுவிடதுடிக்கும்
இலைகளையும் வண்டுகளையும் மலர்களையும்
விடவா மனிதா நீ தாழ்ந்து விட்டாய்?

மீன் நீந்துவதையும் மனிதன் முயற்சியையும்
கற்றுத்தராமலேயே அறிய வேண்டியதல்லவா?

ஒருமுறை வாழ்வில் தோற்றுவிட்டால்
மறுமுறை வெற்றி இல்லையென்று
ஒருமுறையும் மனதில் எண்ணிவிடாதே
உன் மனதை நீயே கொன்றுவிடாதே…

அறிவாயோ மனிதா சிறுவாய்கொண்ட எறும்பும்
உறக்கம் கொள்வதில்லை ஒருநாளும்:
உறக்கம் இல்லா உயிரே உற்சாகமாய் உழைக்கையில்….
உனக்கு மட்டும்
ஏன் வந்தது முடக்கம்…?
தோல்வி என்பது காலைநேர பனிதானடா
துவண்டுவிடாதே முன்னிறுத்து முற்சியை சூரியனாய்….

தேசம் விட்டு தேசம் செல்லும் பறவையை பார்
சோகம் உன்னை விட்டுவிட்டு ஓடிவிடும்

சோகத்தில் தேகத்தை மூழ்க விட்டுவிட்டால்
யோகம் உன்னைத் தேடி வருவதில்லை
வெல்லும்வரை முயற்சியை மட்டும் முன்னிறுத்து….
சிறுஉளிதான் பெருமலையை உடைக்கிறது!

முடியும் என்னும் சொல்லை தன்னம்பிக்கையில் வைத்தால்
முடியாதென்று ஏதேனும் உண்டோ?

விழுந்துவிட்ட மழைத்துளி இறப்பதில்லை-அது
விண்ணைவிட்டு மண்ணில் குடியேறுவதுபோல்
நீ கண்ட தோல்வி தோல்வியல்ல-உன்
வெற்றிக்கு வழிகாட்டும் முதல் படிதான்!

No comments: