Wednesday, September 5, 2007

நானும்… அவனும்..

செங்காடும் கரிசல்பூமியும்
கலந்திருக்கும் அழகான கிராமம்
சிமிழ்விளக்குகளும் சில்வண்டுகளும்
ஆக்கிரமித்துக்கொள்ளும் கிராமத்து இரவு

அறிந்த வயதில்தான் காதல் வருமென்றால்
அறியாத வயதிலேயே வருகிறது நட்பு
நட்பின் இலக்கணம் தெரியாமலேயே
நானும் அவனும் வாழ்ந்த
அழகான கிராமம் அது….

நாங்கள் வெண்சட்டை அணிந்த நாட்களைவிட
கிராமத்தின் மண்சட்டை அணிந்த
நாட்களே அதிகம்….

அடம்பிடித்து பள்ளிசெல்ல மறுத்து
அரசமர நிழலில் ஒளிந்திருந்த
நாட்கள் தான் எத்தனை எத்தனை…

கோகுலத்து கண்ணன் போல் பாவித்து
கோமாதா பின் சுற்றிய
நாட்கள்தான் எத்தனை எத்தனை…

அன்றொரு நாளும் இன்றொரு
நாளுமாய் சென்று வந்து அந்த
அரசுப் பள்ளியில் படித்து முடித்தோம்
எங்கள் ஆரம்ப காலத்தை…

கடிதம் எழுத கற்றுத்தருவதற்காக
காலம் எங்களை பிரித்தது
விடுதியில் நானும் வீட்டிலிருந்து அவனும்
வெவ்வேறு பள்ளிகளில் பிள்ளைகளாய்…

பிரிந்திருந்த நாட்களிளெல்லாம்
பிரிவினை அறியாமல் இருக்க
கடிதமே துணை….

பள்ளிக்கல்வி முடித்தபோது
ஏதேனும் பயிற்சி கல்வி
பயில்வதென்று நான் முடிவெடுத்தபோது
என்னைப்போல் அவனும் நான்காண்டு
தொழிற்கல்வியை தேர்ந்தெடுத்தான்

பருவத்தில் மாற்றம் படிக்கும்
கல்வி முறையில் மட்டுமா…
பாழாய்போன மனதிலும் தானே!

எதுவும் அறியாத சிறுவன் என்று
அவனை எண்ணியிருந்த என்னிடம் வந்து
தனக்கு வந்தது இடமாற்றம் மட்டுமல்ல
இதயமாற்றமும் என்று சொன்னான்

கண்ணோடு சேர்த்து கடிவாளம்
போட்டுவிட்டால் குதிரைக்கு திசை
ஒன்று மட்டும் தெரிவதுபோல
அவன் பாதை காதலை மட்டும் நோக்கி…

என் வாழ்க்கையோ ஏதோ எனக்கு
தெரிந்த தமிழில் கவிதைகளின்
துணையோடு சென்று கொண்டிருந்தது

காதல் வந்துவிட்டாலே…
மரக்கிளை இலைகளின் மழைத்துளிபோல்
கவிதை சொட்ட ஆரம்பித்துவிடுகிறது
ஏனோ இவன் மட்டும் அதில் விதிவிலக்கு
நண்பனாய் வாய்த்துவிட்டதால் என்
தலையெழுத்து அவனுக்கு எழுதித்தருவற்கு

அவள் சிணுங்களையும் சினத்தையும்
சில நேர மௌனத்தையும் சின்னப்
புன்னகையையும் சில்லென்று கேட்கும்
கொலுசொலியையும் சிறுபாதம் தாங்கும்
நிலத்தையும் கண்கள் பேசும்
மொழியையும் அவள்காற்றில் வரையும்
ஓவியத்தையும் தேகம் தாங்கும்
நிறத்தையும் தென்றலாய் நடக்கும்
நடையையும் இப்படி ஒவ்வொன்றாக
நாளொன்றும் கொண்டு வந்தான்
கவிதை எழுத கருவாக…

எல்லாம் எழுதித் தந்துவிட்டு அதை
என் படைப்பாக அச்சில் வடித்தபோதுதான்
வந்தது எனக்குத் தொல்லை-அதுபோல்
என் வாழ்வில் துன்பம் வேறில்லை

கிராமத்துக் காதலுக்கு வேண்டுமென்று
எழுதிக்கொடுத்தேன் அவன்சொல்லி-அது
என் நகரத்து நட்புக்கு
வைத்துவிட்டது முற்றுப்புள்ளி

ஆயிரம் நடந்த போதும்
நானும் அவனும் நண்பர்களே
ஆனால் நானும் …….?

No comments: