Wednesday, September 5, 2007

எனக்கான உன் காதல்…..?

நாம் இருவரும் சேர்ந்திருந்த
கல்லூரி நாட்களில்-நான்
கண்ட கனவுகளெல்லாம்
என்னை மட்டும் காண்பித்திருந்தது
இருண்ட காட்சிகளாய்

பிரிவு நிரந்தரம் என்ற
நிதர்சன உண்மை
புரிந்தபோதுதான் தெரிந்தது
என் கனவு உன்னையும்
அழைத்து வந்து உன்னுடன்
காதலையும் குடிவைத்தது என்பது

விரல் தீண்டாமல்
விழிகளின் காட்சிப்பறிமாற்றம்தான்
காதலின் ஆரம்பம் எனில்
விழிகள் விழித்த நிலையில்
காணும் கனவுகளே
காதலின் ஆதாரம்

எனது ஆதாரம் உன்
நினைவுகளின் கரம்பிடித்து
எங்கோ ஒரு வழிப்பாதையில்
செல்கிறது…….
இணையாக பின்னே நீ வருவாயா என்றும்
இருவழிப்பாதையாக மாறினாலும்-பின்பு
எதிரே வந்து நீ துணையாக
வருவாயா என்றும் எதிர்பார்த்துக்கொண்டு
போகிறது தன்னந்தனியாக….

எனது காதல்
இன்றுவரை ஒருவழிப்பாதைதான்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும் முன்னோக்கினாலும்
எனது விழிகள் இருப்பதென்னவோ
எனது பின்புறம்தான்
தேவதை தேடிவருவாளா என்று

உயிலாக இருந்திருந்தால் உடனே
மாற்றி எழுதியிருப்பேன்
உயிராக சேர்ந்துவிட்டதனால்
செல்லும் இடமெங்கும் உடன்
எடுத்து செல்கிறேன்
இதயத்துடிப்புகளாக இருக்கும்
உன் நினைவுகளை

எத்தனை ஏக்கங்கள் எனக்குள்
இருந்தாலும் என்னை சிதைத்தாலும்
ஊமை கண்ட கனவு போல
என் காதல் எனக்குள்ளே

எதுவும் நீ அறியாத போதும்
எனக்கான உன் காதல்….?

No comments: