Wednesday, September 5, 2007

ஒரு ஈழத்து மனைவி

களம் கண்டு சென்றுவிட்ட காதலன்
கட்டிய மஞ்சள் கயிற்றில்
இன்னும் ஈரம் காயவில்லை…

தேசத்தின் விடுதலைக்காக தேகத்தை
பணயம் வைத்து நீ சென்றிருக்கிறாய்
இந்த தேசப்பிறவி என்பதால்
எனக்குப் பெறுமைதான்- இருந்தும்
மனதின் ஏக்கங்கள் மட்டும்
என்னை மரக்கரையான்களாய் அரிக்கின்றன

சதைப்பிண்டங்களையும் கை கால்
துண்டுகளையும் கண்டு கொண்டிருக்கும்
உனக்கு என் ஞாபகம் என்பது
எதிர்பார்க்கக்கூடாத ஒன்றுதான்

தோட்டாக்கள் உமிழும் துப்பாக்கிகள்
ஒருவேளை தோகைமயிலின் இறகுகளை
உமிழ்ந்தால் உனக்கு என் ஞாபகம்
வருவதற்கு வாய்ப்பு உண்டு
போர்க்களத்தில் எங்கே பூக்களை காண்பது

எப்பொழுதும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க
எங்கள் ஈழம் இரங்களின் கூடம் போலும்:?

ஈழத்தில் எல்லோருக்கும் இறுதி ஊர்வலம்
அரசு மரியாதை போல்தான்-இங்கு
எப்பொழுதும் ஒலித்துகொண்டிருப்பது
துப்பாக்கிகள் மட்டும் தானே

நான் முந்தும் போது உன்
துப்பாக்கி எனக்காக ஒலிக்கட்டும்
நீ முந்தும் போது நமக்காக
இந்த தேசத்தின் துப்பாக்கி ஒலிக்கட்டும்

-அமைதிப்ரியன்

No comments: