Wednesday, September 5, 2007

எனது கேள்வி…!

பொழுதுபோக்காக ஒரு வகுப்பு நேரத்தில்
பொதுவான விசயம் பேசுவதென்று
எல்லோரும் முடிவு செய்து
ஒருதலைப்பு தரப்பட்டது… அது காதல்
அதிலும் ஆண்களுக்கு காதலி

முதலில் யார் பேசுவதென்று
விவாதம் நடந்தபோது
நான் பேசவேண்டுமென்று
என்னை நீ மேடையேற்றினாய்
என் காதலி நீதான் என்று தெரியாமல்

என்னை மேடையேற்றிவிட்டு
என் கண்ணை குறை சொல்கிறாய்
உன்னை மட்டும் பார்க்கிறதென்று
என்ன செய்வது….
பூவைத் தேடித்தானே வண்டு வரும்

என்னைப்பற்றி பேச சொல்லியிருந்தால்
என்ன பேசுவதென்று ஏதாவது யோசித்திருப்பேன்
உன்னைபற்றி பேசச்சொன்னதால்
ஒரு நிமிடமும் தயங்கவில்லை
யோசனையில் எப்பொழுதும் நீதானே

கவிதை இல்லாமல் காதலா
கவிதையாய் உரையைத் தொடங்கினேன்

கன்னி அவள் கூந்தல் கண்டு
காரிருள் வந்து கடன் கேட்கிறது
தனக்கு கருமை காணாதென்று
முதுகை தொட்டுவிட்டாலே கூந்தல்
முழுவளர்ச்சி கண்டதென்று
மகிழும் பெண்கள் மத்தியில்
இடைதாண்டி தொடை தொடுவோமா
வேண்டாமா என்றிருக்கும் அவள்கூந்தல் கண்ட போது
கன்னியர் மத்தியிலும் சிறு கலக்கம்தான்

தென்றல் வேண்டுமெனில் அவள்
இமையை இமைக்க சொல்லலாம்

திங்களின் இரு பிறப்பாம்
பௌர்ணமியும் அமாவாசையும்
அவள் கண்களில் சங்கமம்
கறுப்பும் வெள்ளையுமாய்

இதழ்களுக்கிடையே போட்டி
நீ மெலிதா நான் மெலிதாவென்று
இறுதியில் ரோஜா தோற்றுப்போகிறது
இப்படியும் இதழ்கள் இருக்குமாவென்று

நடை நடக்கும்போது
இடம் வலம் சென்றுவரும் இடை
இருவிரலுக்குள் அடங்குவதில் இல்லை தடை

எல்லோரும் நடக்கும் போது
எதுவும் பேசாத மண் -உன்
பாதம் படும் வேளையில் மட்டும்
பேசுகிறது இங்கேயே நிற்கக்கூடாதாவென்று
மலரைத் தாங்குவதற்கு
யாருக்குத்தான் மனம் வராது

மழைத்துளிகள் மட்டும் வருந்துவதுண்டு
உன் மீது விழ முடியாமல்
குடைகள் தடுப்பதனால்

இப்படியாக என் காதலியை
நான் வர்ணிப்பதாக நீ
இமை தட்டாது இதழ் புன்னகையால்
ரசித்துக்கொண்டிருந்தாய்
என் காதலியே நீதான் என்று தெரியாமல்

எனது கேள்வியெல்லாம் இதுதான்
என் காதலி நீதான் என்று தெரியும்போது
இதழ்களில் இந்த புன்னகை
தேங்கி நிற்குமா என்பதுதான்….?

No comments: