Monday, December 15, 2008

இரகசியம்


அடிமை விலங்குகளை அகற்றுவதில்
செந்நீர் உதிர்ப்பதும் தன் உயிர் கொடுப்பதும்
தமிழனுக்கு ஒன்றும் புதிதில்லை அன்று..

இன்றோ தன்னுயிர் காக செந் நீர் சிந்தி
பூமிபந்தில் ஆங்காங்கே வாழ்கிறது
என் தமிழர் இனம்...
ஈழத்தமிழர் இனம்

இறையாண்மைக்கு எதிராக எதுவும்
பேசமாட்டோம்... சொல்கிறது
என் இந்தியா...!
இருப்பவர்களெல்லாம் இடம் பெயர்ந்த பின்பு
இறையாண்மை என்ன வேண்டி இருக்கிறது...?

கண்ணசைவு கட்டளையில்
கைகட்டி நிற்க வேண்டிய ஓர் அரசை
ஆயுதம் ஏந்த அனுமதித்து விட்டு
அதை ஆதரித்தும் வருகிறது இந்திய அரசு

இத்தாலியின் தலைமை ஏற்ற இந்தியாவுக்கு
தமிழன் அந்நியனாய் தெரிகிறான் போலும்

என்ன இறையாண்மை கொள்கையோ
"அழித்தலும்"...."காத்தலும்"
"சிவனும்" "நாராயணனும்" அறிந்த இரகசியம்
அவர்கள் புரிந்த இரகசியமும் கூட....!

தோழியா....காதலியா....!?


மழை நீரினால் அல்ல
மழைமேகக் காற்றின் ஈரப்பதம் கூட
கண்டிராத பூமியில்
பெருவெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுவதைப்போல்......
எனக்குள் ஒரு மகிழ்ச்சி அன்று:

நினைவுகளில் என் அருகில் நின்று
நிஜத்தின் இடைவெளியில் நெடுந்தூரம்
சென்றுவிட்ட என் பெண் தோழி
அவளைக் கண்ட நாள் அன்று

வெள்ளிப்பனிமலையை நூழிலையாய் சேகரித்து
உயர் தங்கம் குழைத்து ஜரிகையாய் தொடுத்து
மின்னலைப்போல் நெய்த புடவை அது
அவள் மேனியில் செல்லமாய்
தவழ்ந்திடும் காட்சி
வெண்ணுடை தரித்த தேவதை- என்
விழிமுன்னே வந்தது போல் மகிழ்ச்சி

இன்று பூத்த மலர்போல்
புன்னகை பூத்திருக்கும் இதழ்கள்
அந்த இதழ்கள் பேசும் இசைலயத்திற்கேற்ப
நடனம் புரியும் அவள்
அணிந்திருக்கும் காதணிகள்

அந்தக் கம்பனையும் மீண்டும்
பிறந்து வந்து கவிபாடத்தூண்டும்
அவள் கொண்ட கருங்குழல்
புல்லாங்குழலின்றி இசை
கொடுக்கும் அவள் குரல்
இத்தனை அழகையும் மொத்தமாய் சேகரித்து
என் எதிரே நின்று புன்னகைத்து கொண்டிருக்கிறாள்
புகைப்படத்தின் வழியே!

எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்
இவள் என் தோழியா.... காதலியா...!?

முவ்வாறு வயதினிலே...?




கண்டதும் கேட்டதும்
கால்கடுக்க நின்றதும்
சென்றதும் வென்றதும்
சிதிலடைந்த நெஞ்சத்தைக் கொன்றதும்
என்று எல்லாம் கண்டுவிட்டேன் காதலில்
நீயோ என்னைக் கொண்டு
விட்டுவிட்டாய் சாதலில்

பார்த்தேன் ரசித்தேன் பழகினேன்
பருவத்தில் காதல்தனில் பூத்தேன்
பாவம் வேறென்ன நான் செய்தேன்
என் உருவம் கெடுத்து அருவம் கொடுத்தாயே

அழுதேனே உன்னைத்தொழுதேனே
உன்னில் விழுந்தேனே பின்பு
எழுந்தேனே புதிதாய் விளைந்தேனே
நான்........... நீயோ
என்னை இகழ்ந்தாயே
எச்சில் உமிழ்ந்தாயே
கண்ணில் கர்வம் சுமந்தாயே

கற்றதும் பெற்றதும்
கண்ணீரால் கன்னத்தைச் சுட்டதும்
எடுத்ததும் கொடுத்ததும்
உன்னில் என்னைத் தொடுத்ததும்
என்று எல்லாம் முடிந்துவிட்டது
என் வாழ்வில்.....எங்கோ
நடந்துவிட்ட உன் திருமணத்தால்

அவ்வாறு நடந்துவிட்ட திருமணத்தால்
இவ்வாறு பிதற்றுகிறேன் பித்துபிடித்து
எவ்வாறு இனி நான் வாழ்வது - இதற்கு
முவ்வாறு வயதினிலேயே நான்
மூச்சை இழந்திருக்கலாம்.........!