Wednesday, September 5, 2007

என் கைக்கடிகாரம்

துடிப்புதான் வாழ்க்கையென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது
மனம் அறியும்
மௌன மொழியால்

அல்லி மலரும் நேரமென்றும்
வெள்ளி முளைக்கும் நேரமென்றும்
விண் விழிக்கும் நேரமென்றும்எ
த்தனை எத்தனையோ பிரிவுகள்
இருந்தும் எதுவும் அறியாமல்
இயக்கம் மட்டும் வட்டப்பாதையில்

ஆளப்பிறந்த அலெக்ஸாண்டர்
அவதிப்பட்ட இயேசு கிறிஸ்து
அகிம்சை என்று
சொல்லித்திரிந்த காந்தி-வெள்ளை
ஆணவம் அழித்திட்ட சுபாஷ்
எத்தனை எத்தனை தலைவர்கள்
எவ்வளவு சாதனைகள் அதிலும்
இழைக்கப்பட்ட வேதனைகள்
காலமெனும் பெயரில் அது
காத்து வரும் வரலாறுகள்தானே இவை

பொறுமை கற்றுத்தர சின்னமுள்
போதிய திட்டமிடலுக்கு பெரியமுள்
செயல்பாட்டின் வேகத்திற்கு நொடிமுள்
எத்தனை பெரிய செய்தியை
எவ்வளவு அடக்கமாக கூறுகிறது

எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும்
என் கைக்கடிகாரம் துடிப்பதென்னவோ
அவளின் நினைவுகளை சுமந்துகொண்டுதான்!

No comments: