Monday, December 15, 2008

இரகசியம்


அடிமை விலங்குகளை அகற்றுவதில்
செந்நீர் உதிர்ப்பதும் தன் உயிர் கொடுப்பதும்
தமிழனுக்கு ஒன்றும் புதிதில்லை அன்று..

இன்றோ தன்னுயிர் காக செந் நீர் சிந்தி
பூமிபந்தில் ஆங்காங்கே வாழ்கிறது
என் தமிழர் இனம்...
ஈழத்தமிழர் இனம்

இறையாண்மைக்கு எதிராக எதுவும்
பேசமாட்டோம்... சொல்கிறது
என் இந்தியா...!
இருப்பவர்களெல்லாம் இடம் பெயர்ந்த பின்பு
இறையாண்மை என்ன வேண்டி இருக்கிறது...?

கண்ணசைவு கட்டளையில்
கைகட்டி நிற்க வேண்டிய ஓர் அரசை
ஆயுதம் ஏந்த அனுமதித்து விட்டு
அதை ஆதரித்தும் வருகிறது இந்திய அரசு

இத்தாலியின் தலைமை ஏற்ற இந்தியாவுக்கு
தமிழன் அந்நியனாய் தெரிகிறான் போலும்

என்ன இறையாண்மை கொள்கையோ
"அழித்தலும்"...."காத்தலும்"
"சிவனும்" "நாராயணனும்" அறிந்த இரகசியம்
அவர்கள் புரிந்த இரகசியமும் கூட....!

தோழியா....காதலியா....!?


மழை நீரினால் அல்ல
மழைமேகக் காற்றின் ஈரப்பதம் கூட
கண்டிராத பூமியில்
பெருவெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுவதைப்போல்......
எனக்குள் ஒரு மகிழ்ச்சி அன்று:

நினைவுகளில் என் அருகில் நின்று
நிஜத்தின் இடைவெளியில் நெடுந்தூரம்
சென்றுவிட்ட என் பெண் தோழி
அவளைக் கண்ட நாள் அன்று

வெள்ளிப்பனிமலையை நூழிலையாய் சேகரித்து
உயர் தங்கம் குழைத்து ஜரிகையாய் தொடுத்து
மின்னலைப்போல் நெய்த புடவை அது
அவள் மேனியில் செல்லமாய்
தவழ்ந்திடும் காட்சி
வெண்ணுடை தரித்த தேவதை- என்
விழிமுன்னே வந்தது போல் மகிழ்ச்சி

இன்று பூத்த மலர்போல்
புன்னகை பூத்திருக்கும் இதழ்கள்
அந்த இதழ்கள் பேசும் இசைலயத்திற்கேற்ப
நடனம் புரியும் அவள்
அணிந்திருக்கும் காதணிகள்

அந்தக் கம்பனையும் மீண்டும்
பிறந்து வந்து கவிபாடத்தூண்டும்
அவள் கொண்ட கருங்குழல்
புல்லாங்குழலின்றி இசை
கொடுக்கும் அவள் குரல்
இத்தனை அழகையும் மொத்தமாய் சேகரித்து
என் எதிரே நின்று புன்னகைத்து கொண்டிருக்கிறாள்
புகைப்படத்தின் வழியே!

எனக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்
இவள் என் தோழியா.... காதலியா...!?

முவ்வாறு வயதினிலே...?




கண்டதும் கேட்டதும்
கால்கடுக்க நின்றதும்
சென்றதும் வென்றதும்
சிதிலடைந்த நெஞ்சத்தைக் கொன்றதும்
என்று எல்லாம் கண்டுவிட்டேன் காதலில்
நீயோ என்னைக் கொண்டு
விட்டுவிட்டாய் சாதலில்

பார்த்தேன் ரசித்தேன் பழகினேன்
பருவத்தில் காதல்தனில் பூத்தேன்
பாவம் வேறென்ன நான் செய்தேன்
என் உருவம் கெடுத்து அருவம் கொடுத்தாயே

அழுதேனே உன்னைத்தொழுதேனே
உன்னில் விழுந்தேனே பின்பு
எழுந்தேனே புதிதாய் விளைந்தேனே
நான்........... நீயோ
என்னை இகழ்ந்தாயே
எச்சில் உமிழ்ந்தாயே
கண்ணில் கர்வம் சுமந்தாயே

கற்றதும் பெற்றதும்
கண்ணீரால் கன்னத்தைச் சுட்டதும்
எடுத்ததும் கொடுத்ததும்
உன்னில் என்னைத் தொடுத்ததும்
என்று எல்லாம் முடிந்துவிட்டது
என் வாழ்வில்.....எங்கோ
நடந்துவிட்ட உன் திருமணத்தால்

அவ்வாறு நடந்துவிட்ட திருமணத்தால்
இவ்வாறு பிதற்றுகிறேன் பித்துபிடித்து
எவ்வாறு இனி நான் வாழ்வது - இதற்கு
முவ்வாறு வயதினிலேயே நான்
மூச்சை இழந்திருக்கலாம்.........!

Thursday, May 8, 2008

வாழ்க நீவிர் பல்லாண்டு!

கனவுகளோடும் கற்பனைகளோடும்
காத்திருந்த நாட்களையெல்லாம்
நல்ல கவிதையாக கடத்திவிட்ட
இரு மனங்களின் இடப்பறிமாற்றம்
திருமணமாய் இன்று உருமாற்றம்

வாழ்வில்
ஒருமுறை வரும் இந்த சந்தோசம்
முதல்முறை இவர்களுக்கு இன்று

இறைவன் படைப்பில்
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட தீர்ப்பு
இங்கே நிறைவேற்றப்படுகிறது இருகரம்
இணைத்து வைக்கப்பட்ட திருமணத்தால்

நிறைவேற்றப்பட்ட தீர்ப்பில்
இராமனுக்கு அணில்போல
என் பங்கும் கொஞ்சம் சேர்ந்திருக்கிறது
இவர்களுக்கு நான் வாழ்த்து சொல்வதனால்!

வாழ்த்துகளை வார்த்தைகளாய் கூறினால்
கேட்கப்படும்போதே.....
மறக்கப்பட்டுவிடும் என்பதால்
வாசகங்களாய் பதிப்பித்து தருகிறேன்
வாழ்க நீவிர் பல்லாண்டு!

Wednesday, April 30, 2008

இன்றாவது வேலை கிடைக்குமா..?

எனை ஈன்ற என் அன்னை
கருவறை வாழ்விலேயே என்னை
கலைத்திருக்கலாம்..

எல்லோரும் போல் தன்பிள்ளையும்
வளமாக வாழ்ந்திட வேண்டும் என்று
கனவுகள் வளர்த்தாள்-கனவுகள்
நனவாக்கிட எனை இப்பூமியில் பிரசவித்தாள்

என் பசியை அவள் வயிற்றில் உணர்ந்து
என்னை கண்போல காத்து நின்றாள்
கல்வியை காணாத அவள்-என்
கைப்பிடித்து கல்விக்கூடம் அழைத்து சென்று
தன் கண் குளிர எனைப்பார்த்து ரசித்தாள்

இன்றோ.. அன்னை தேசம் என்னைத்தாங்கும்
என்ற நம்பிக்கையில் அவள் அறிந்தே
இராத ஊருக்கு வேலை தேடி
அனுப்பிவைத்தாள் என்னை சுமந்த அன்னை

இங்கு பத்துக்குபத்து அறையில்
பலரில் ஒருவராய் தங்கி
அடி எடுத்துவைத்து நாள்தோறும்
அளந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொறு தெருவாய்-இன்றாவது
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டிருக்கும்
என் கால் செருப்பினைப்போல -என்
நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது

தகுதிகள் எல்லாம் இருந்தும்
பகுதியில் கூட வேலை செய்ய
தாயாராய் இருந்தும்-பணி
கிடைப்பது மட்டும் கானல் நீராய்

இன்று நான் எத்தனை முறை
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை
என் பசி மதிப்பிடுவதில்லை
என் பையில் இருக்கும் பணம் தான் மதிப்பிடுகிறது..
மழைவிட்டபிறகும் நீர்த்துளிகள்
மரக்கிளையில் சொட்டிக்கொண்டிருப்பதைப்போல
என் அன்னையவளின் பராமரிப்பு நினைவுகள்
இப்பொழுதும் எனக்குள் சொட்டிக்கொண்டிருக்கின்றன..!

இதற்கிடையில்..
இன்னுமா என்னை நம்பிக்கொண்டு
இங்கு இருக்கிறாய் என்று
நான் பெற்ற பட்டம் என்னப்பார்த்து
பல்லைக் காட்டுகிறது..?

இப்பொழுது சொல்லுங்கள்
எனை ஈன்ற என் அன்னை
கருவறை வாழ்விலேயே என்னை
கலைத்திருக்கலாம்தானே....?

Friday, February 29, 2008

காதல் வடுக்கள்!!!

நிழலாகிப்போன நிஜங்கள்
இதயத்தில் சுவடுகளாக...
அதை ஸ்பரிசிக்கும்போது-ஏனோ
சொல்ல முடியாத வலியுடன்
ஒரு சுகம்!

என் காதல் பெரியதுதானே..?

முகத்தின்
முன்பு காட்டப்படாத
அன்பும் காதலும்தான்
காகிதத்தில் கவிதைகளாகவும்
கட்டுரைகளாகவும்
வெளிப்படுகிறது

இந்த வகைதான் என் காதலும் போல!

காற்றிலும் நீரிலும்
காதலியின் காலடி தேடி
அலையவைக்கும் காதல்களுக்கு மத்தியில்
என்னவள் மீது நான் காட்டும் அன்பையும் காதலையும்
அவளுக்கு தெரியாத போதும்
அவளோடு கவிதையில் என்னை
வாழ வைக்கும் என் காதல் பெரியதுதானே!

Thursday, February 28, 2008

என் காதலும்...அவளின் காத்திருப்பும்?


சலசலவென ஓடும் நீரோடையைப்பார்க்கும் போதெல்லாம்

கலகலவென நீ பேசும் பேச்சுதான்

என் நினைவிற்கு வருகிறது...

நீரோடையோடு போராடிப்பார்த்துவிட்டு....

முடியாமல் புதைந்துபோன கூழாங்கல்

நீரில் மோதி மோதி இன்று பளிங்கினைப்போல் காட்சி அளிக்கிறது

நானும் அந்த கூழாங்கற்களைப்போல்தான்

கொஞ்சம் வித்தியாசமாக...

வேண்டுமென்று நினைத்து

மோதிப்பார்த்தேன் காதலுடன்

காதலோ என்னை வேண்டாமென்று சொல்லி

தன்னுள் என்னை மூழ்கடித்துவிட்டது

மீண்டும் மீண்டும் மோதிமூழ்கடிக்கப்பட்ட நானோ

இன்றும் காதலோடுதான் வாழ்கிறேன்

என்னை காதலில் மூழ்கடித்த அவளோ

நிச்சயிக்கப்பட்ட நாளில்வரும் கணவனுக்காக காத்திருக்கிறாள்

Monday, February 25, 2008

சூழ்நிலை மறுப்பில் காதல்



கடற்கரையோரமாய் பதிந்திருக்கும்

காலடிச்சுவடுகளில் நானும்

நாள்தோறும் தேடிப்பார்க்கிறேன்

எனைப் பிரிந்த என் காதல்

இங்கு வந்து சென்றிருக்குமா என்று

ஒருகாலின் சுவடு மட்டும் ஓரிடத்தில்

பதியப்பட்டு மறுகாலின் தடத்தில்

என் பெயர் எழுதி அழிக்கபட்டிருக்கிறது

ஏதோ காரணங்களுக்காக இதழ்கள்

சில விசயங்களை மறுத்தாலும்

இதயம் மறுப்பதில்லை மறைப்பதுமில்லை

என் போல் அவளும் வந்து தேடியிருக்கலாம் என் காலடிச்சுவடுகளை