Wednesday, September 5, 2007

நட்பும்…..காதலும்…..

நகர்ந்துவிட்ட நாட்கள் அது:

நனைந்துவிட்ட இலவம் பஞ்சை
பிழிகையில் வடிகின்ற நீர்த்துளிபோல்
இன்று என்னுள் சொட்டிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்…..

நான்காண்டு நம் கல்லூரி வாழ்வில்
ஓராண்டு முடிந்த பின்புதான்
நம் நட்பின் அரங்கேற்றம் வந்தது
அதுவரை நடந்ததெல்லாம்
அரங்கேற்றத்திற்கான பயிற்சிகள் போலும்

எத்தனைமுறை நான் அழைத்தபோதும்
அத்தனைமுறையும் தொலைபேசியின் வழியே
உன் குரல் என் காதில் இனிமையாய்…
சடசடவென்று சத்தம் கொடுத்தபோதும்
ஜன்னலோர மழைத்துளியின் சுகம்போல்

ஆண்டுதோறும் வரும் என் உதய நாளுக்கு
அன்னையையும் அழைத்து சென்று
அழகான நினைவுப்பரிசு ஒன்று வாங்கினாலும்
இல்லம் தேடிவந்து
நான் வாங்கவேண்டுமென்று
செல்லமாய் எனக்கு உத்தரவிடுவாய்

எனக்கு முதல் மாதம் உனக்கு வந்த
உன் வாழ்வின் சிறந்த நாளாம்
உன் பிறந்த நாளில்
உன் அன்னையின் கைச்சுவை
நான் கண்டிருந்ததால்
அன்பின்சுவை தேடி என் கால்கள்
வந்துநிற்கும் என் பிறந்தநாளில்
உன் பிறந்தகத்தில்…

நிமிர்ந்து பார்த்த ஆகாயத்தை
சாய்ந்து பார்த்த போதும்
அதன் எல்லை தெரியாதது போல
எத்தனை எத்தனையோ நம் நினைவுகள்
ஏட்டில் எழுத முடியாமல் என்னுள்

எல்லாம் நகர்ந்துவிட்ட நாட்கள் அது:

அலைகள் வந்து விட்டுசென்ற
கரையில் தவிக்கும் நுரைகள்போல்
நட்பலையில் உருவான காதல்
இன்று என் கரையில் தவிக்கிறது

நமக்குள் நட்பும் எனக்குள்
காதலும்….
இன்று விதியின் விளையாட்டில்!

No comments: