Wednesday, September 5, 2007

என் காதலி….!

மரக்கிளைகள் தோரணம் கட்டி
தார்சாலை எங்கும் நீர்சாலையாக
மாற்றியிருந்த அழகான
மழைக்கால காலைநேரம்

மனிதர்கள் நடமாட மறந்த
தார்சாலையில் மரக்கிளைகள்
சேமித்த நீர்த்துளிகள்
இலைகளிடையே
சொட்டிக்கொண்டிருக்கின்றன
எனக்குள் சிந்திக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள் போல

யாருமில்லாத அந்தப் பாதையில்
யாரும் சேராது நான் சென்று
ஊரில் யாரும் மிதிக்கும் முன்னே
உதிர்ந்த பூக்களையெல்லாம்
பாவை உன்னைத் தொடுவதுபோல்
பட்டும் படாமல் சேகரித்தேன்
பூவை தாங்கும் பூவைக்காக

போதும் போதும் என்று நீ
சொல்லவேண்டுமென்பதற்காக
உன் பூக்கூடையை விட
பெரியதாகச் செய்ய சொன்ன
பூக்கூடையை தூக்கிக்கொண்டு
பொழுது புலரும் நேரத்தில்-உன்
வாசல் தேடி நான் வர
குழைசாய்ந்த வாழைமரம் போல்
தலைசாய்ந்து நீ
வெட்கமும் புன்னகையும் கலந்து
வாசலில் நின்றிருந்தாய்
கீழ்வானச் சூரியன் போல்

பட்டுக்கொள்ளுமோ
தொட்டுக்கொள்ளுமோ என்று
அறியாது வேகத்தில்
சட்டென்று கூடை இடமாற்றி
சிட்டொன்று பறப்பதுபோல்
பட்டென்று நீ ஓடிவிடுவாய்
பற்றியெரியும் என் இதயத்தையும்
சேர்த்து எடுத்துக்கொண்டு

நீர்சாலையையும்
தார்சாலயையும் காலைநேர
பூச்சாலையாய் ரசிக்க வைத்தது
தலையில் நீ சூடும் பூக்காடுதானே

தலைமுடியின் நிறத்தை உன்
தேகமெங்கும் நீ தாங்கினாலும்
தகனமிட்ட தங்கம் கூட
உன் முகலட்சணத்தின் முன்னே
கொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது

உண்மையை சொல்ல வேண்டுமானால்
ஒவ்வொரு பெண்ணின் முகமும்
எப்படி அமைய வேண்டுமென்று
உன் முகம் காட்டும் உதாரணம்

எத்தனை பெண்கள் எதிரெதிரே
வந்த பொழுதும் எடுத்து
இடம் மாற்ற மனம் வராத
ஒரு முகம் உன் முகம்

உன்னை பேரழகி என்று
நான் சொல்லமாட்டேன்
உண்மையில்
நீதான் ஓர் அழகி

என்னை ஒருதலையாய்
காதல் செய்ய வைத்த-இந்த
கறுப்பழகிதான் என் காதலி!

No comments: